வாங்க.. வாங்க.. வணக்கம். தங்கள் வரவு நல்வரவாகுக. வந்ததும் வந்தீங்க, ஏதாவது சொல்லிட்டு போங்க !

6 செப்., 2014

தியாக நாய்

அனாதையான குட்டிகள்
குலவிளக்கு என்ற பழைய தமிழ்த் திரைப்படத்தில் ஒரு காட்சி. காசநோயால் பாதிக்கப்பட்ட கதாநாயகி, பழைய பொருட்களை போட்டு வைக்கும் இடத்தில் தூக்கி வீசப்பட்டிருப்பாள். மரணம் நெருங்குகிறது. அவள் பாசமாக வளர்த்த நாய் இதை அறிந்து கொள்கிறது. தன் வாயில் ஒரு சிறிய பாத்திரத்தை தூக்கிக் கொண்டு தண்ணீர் எடுத்து வந்து அவள் அருகில் வைக்கிறது. எப்படியாவது அவள் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், அதற்குள் அவள் இறந்து விடுகிறாள். நன்றி பெருக்கால் அந்த நாய் இதை செய்கிறது. அந்த காட்சியை நான் கண்டபோது கண்ணீர் வடித்தேன்.

நன்றி கெட்ட மகனை விட நாய்கள் மேலடா? என்றொரு பாடலை நாம் கேட்டிருப்போம். பெற்று வளர்த்த பிள்ளைகள்கூட நன்றி கெட்டவர்களாக மாறி விடுவார்கள், ஆனால் எப்போதும் நன்றி மறக்காத நாய்கள் அவர்களை விட மேலானவை என்ற அர்த்தம் அந்த பாட்டில் சொல்லப்பட்டிருக்கும்.

இப்படி நன்றி என்ற சொல்லுக்கு உதாரணமாக காட்டப்படும் ஒரே ஜீவனான நாய் ஒன்று தனக்கு தியாக உணர்வும் இருக்கிறது என்பதை காட்டியிருக்கிறது.

தினகரன் நாளேட்டில் (05.09.2014) அந்த செய்தியை படித்தேன். மனம் கலங்கி போனேன். கண்களின் ஓரம் கண்ணீர் வழிந்தது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் பழைய மூர் மார்க்கெட் இருந்த இடத்திற்கும் (இன்று அல்லிகுளம் வளாகம்) இடையில் இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் நீர் தேங்கி இருந்துள்ளது. அந்த பகுதியில் இருந்த விளக்கு கம்பத்தில் மின்கசிந்ததால் மழை நீரிலும் மின்சாரம் பாய்ந்திருந்தது. யாருக்கும் இது தெரியவில்லை. 

இரவு 10 மணியளவில் ரயிலை பிடிக்கும் அவசரத்தில், மழைநீரில் கால் வைக்க  வந்த பயணிகளை அங்கிருந்த நாய் ஒன்று விரட்டியது. நாயின்  சீற்றத்தை பார்த்த பயணிகள் பயந்துபோய், மழைநீர் இருந்த பக்கம்  வராமல் சுற்றியபடி சென்றனர். தனியாகவும், கூட்டமாகவும் வந்த  10-க்கும் மேற்பட்டவர்களை அந்த நாய் விரட்டியபடியே  இருந்தது. சிலர் பயத்தில் நாய் மீது கல் எறிந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்புதான் அந்த நாய் 7 குட்டிகளை போட்டிருந்தது. குட்டிகள் இன்னும் நடமாட ஆரம்பிக்கவில்லை.

அந்த வழியாக சென்ற இளைஞர் ஒருவர், நாய்  குரைப்பதையும், தன்னை விரட்ட முயல்வதையும் கண்டுகொள்ளாமல் மழைநீர் தேங்கிய பகுதிக்கு அருகே சென்று  விட்டார். அவரை நோக்கி நாய்  குரைத்துக்கொண்டே இருந்தது. தன் வேகத்தை  குறைத்து நின்று, நாயை விரட்ட அவர் கல் தேடினார். சற்றுநேரத்தில் குரைப்பதை நிறுத்திய அந்த நாய், வேகமாக ஓடிவர ஆரம்பித்தது.  தன்னை நோக்கி ஓடிவந்த நாயை அந்த இளைஞர், பார்த்துக் கொண்டே  இருந்தார். அதற்குள் அந்த நாய், மின்கசிவு  ஏற்பட்டிருந்த மழைநீரில் வேகமாக பாய்ந்தது. அதில் இருந்த மின்சாரம் பாய்ந்து, நாய் துடிதுடித்து இறந்தது. இளைஞர் அதிர்ச்சியில் உறைந்தார். மேலும், அந்த வழியாக வந்த பொதுமக்கள் சிலரும் அப்படியே சிலையாக நின்றனர். மழைநீரில் மின்சாரம் பாய்ந்த விஷயம், அந்த நாய் இறந்தது  மூலம்தான் தெரிய வந்தது.

உடனடியாக மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஊழியர்கள் வந்து  மின்சாரத்தை துண்டித்து அந்த இடத்தை சரி செய்தனர். மழை நீரில் இறந்து கிடந்த நாய் மீட்கப்பட்டு, நடைமேடையில் கிடத்தப்பட்டது.  பயணிகளையும், நடை பாதையில் கடை வைத்திருப்பவர்களையும்  காப்பாற்றிய நாய்க்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. தாயை இழந்து தவித்த 7 நாய்க்குட்டிகளும் மீட்கப்பட்டு புளுகிராஸ் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.

பாச உணர்வு, நன்றி உணர்வு கொண்ட வீட்டு விலங்கான நாயின் இந்த செயலால் தனக்கு தியாக உணர்வும் இருக்கு என்பதை மனிதர்களுக்கு உணர்த்தி விட்ட்து.

இனிமேல் யாரையாவது, போடா நாயே என்று சொல்வதற்கு முன் அவரிடம் இத்தகைய பண்புகள் இருக்குமா? என்பது குறித்து யோசிக்க வேண்டுமோ என்னவோ?



5 மே, 2014

கடவுளின் குமாரன்

Son of God
நீண்ட நாட்களுக்குப் பின் நேற்று தியேட்டருக்குச் சென்று படம் பார்த்தேன். எந்தவித இடையூறுகளும் இல்லாமல் அமைதியாக இப்படி ஒரு படத்தை என் வாழ்க்கையில் நான் பார்த்ததே இல்லை.

படத்தில் உணர்ச்சிகளை தட்டி எழுப்பும் சீண்டல், முட்டல், மோதல், காதல், விரசமான பாடல் காட்சிகள் எதுவும் இல்லாததால் விசில் சத்தம் இல்லை. கைத்தட்டல்கள் இல்லை. வித்தியாசமான கமெண்ட்கள் இல்லை. படத்தின் இடையில் எழுந்து போவதும் இல்லாமல் படம் பார்க்க முடிந்தது.
எனக்கு இது ஆச்சர்யமாக இருந்தது.

அண்மையில் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளிடப்பட்ட இயேசு படத்தைதான் பார்த்தேன்.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் படம் பார்க்க வந்தவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அவர்களில் அநேகர் கிறித்தவர்களாக இருப்பார்கள் என்றே எனக்கு தோன்றியது.

கிறித்துவை அணிந்தவன் என்ற முறையில் அந்த படத்தை பார்த்தேன். ஏற்கெனவே பரிசுத்த வேதத்தில் அடிக்கடி படித்து ருசித்தவைதான், என்றாலும் அவற்றை எப்படி விஷுவலாக கொண்டு வந்து நம் கண் முன் நிறுத்தியிருக்கிறார்கள் என்பதை அறிய வேண்டும் என்று ஆவலாக படம் பார்த்தேன்.

இயேசுவின் வாழ்க்கை வரலாறு குறித்த எத்தனையோ படங்கள் வந்து அவற்றை பார்த்திருக்கிறேன். இந்த படத்தில் இயேசுவின் சீடர் இயேசுவை குறித்து சொல்வதை போல் படம் தொடங்கி அவரின் முடிவு வரை படத்தில் வித்தியாசமாகவே காட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தகக்து.

இயேசுவின் பிறப்பு, அவர் இந்த பூமிக்கு எந்த நோக்கத்திற்கு அனுப்பப்பட்டார், மக்களை கடவுளுக்கு நேராக திருப்ப அவர் ஆற்றிய அருளுரைகள், அதற்காக அவர் மேற்கொண்ட பணிகள், அவற்றின் மூலம் அவரிடம் இருந்து வெளிப்பட்ட அற்புதங்கள், அதிசயங்கள், இவற்றையெல்லாம் செய்ததற்காக அவர் அனுபவித்தப் பாடுகள், முடிவில் அவர் சந்தித்த மரணம், மரணத்திற்கு பின் அவர் தேவனின் குமாரன் - தெய்வத்தன்மை கொண்டவர் என்பதை வெளிப்படுத்த உயிருடன் எழுந்தது,  இவை எல்லாம் படத்தில் விஷுவலாக காட்சிப்படுத்தப்பட்டது.
அருகில் இருந்து பார்த்ததைப் போன்ற உணர்வு படம் முடிந்து வெளியே வரும்போது எனக்கு ஏற்பட்டது.

இன்னும் விரிவாக சொல்லியிருக்கலாமோ என்ற ஆதங்கமும் எனக்கு வெளிப்பட்டது.

வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் இந்தப் படத்தை பாருங்கள். 

6 நவ., 2013

கேவலமான இளைஞன்!

நான் கடவுள் படத்தில் பிச்சை எடுப்பதற்காக மனிதர்கள் விற்பனை செய்யப்படுவதாக காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அந்த காட்சியை பார்த்தபோது இப்படிக்கூட நடக்குமா? என்று நான் யோசித்தேன்.

நடைமுறையில் மனிதர்கள் கொத்தடிமைகளாக விற்கப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டு மீட்கப்பட்ட செய்திகளை படித்த பிறகு, இப்படியும் நடக்க வாய்ப்பிருக்கிறது என்ற முடிவுக்கு நான் வந்தேன்.

மதுரையில் ஒரு இளைஞன் (வயது 27) படுகொலை செய்யப்பட்டான். எதற்காக தெரியுமா? ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு நண்பனிடம் விற்ற மனைவியை மீண்டும் குடும்பம் நடத்த அழைத்ததற்காகத்தான்.

ஏழு ஆண்டுகள் குடும்பம் நடத்தி இரண்டு பிள்ளைகள் பெற்றெடுத்த ம்னைவி, அவரின் நண்பருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததை அறிந்ததும் இருவரையும் அவன் கண்டித்திருக்க வேண்டும்.

மாறாக, கள்ளத்தொடர்பு வைத்திருந்த இருவரையும் அழைத்து விசாரித்து, ஒப்பந்தம் போட்டு ஒன்றரை லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு மனைவியை விற்றிருக்கிறான் கேவலமான அந்த இளைஞன்.

மனைவியும் மகிழ்ச்சியோடு பிள்ளைகள் இருவரையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு காதலனுடன் சென்றிருக்கிறார். அதோடு எங்கேயாவது போய் செத்து தொலைந்திருக்கலாம் அவன்.

ஓராண்டு கழிந்த பிறகு திடீரென ஞானோதயம் ஏற்பட்டிருக்கிறது. விற்ற மனைவியை மீண்டும் சந்தித்து பாவ மன்னிப்பு கேட்டு வாழ வருமாறு கேட்டிருக்கிறான். அவளோ, பணத்திற்கு விற்று விட்ட நீ ஏன் என்னைத் தேடி இங்கு வந்தாய்? என்று கேட்டு துரத்தியிருக்கிறாள்.

இதைக் கண்ட நண்பன், சமயம் பார்த்து அவனை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளான். 

அண்மைக்காலமாக குடும்ப அமைப்பு சிதைந்து கொண்டே வருகிறது. எங்கு பார்த்தாலும் கள்ளத்தொடர்பும், அதன் விளைவாக இதுபோன்ற கொலைகளும் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன.

எல்லாவற்றையும் விட, பணத்திற்காக மனித குலம் எத்தகைய கீழ்நிலைக்கும் செல்கிறதே என்று நினைக்கும்போதுதான் மனம் வேதனை அடைகிறது.

இப்போதெல்லாம் செய்த தவறுக்கு உடனுக்குடன் தண்டனை கிடைத்து விடுகிறது என்ற நினைப்பும் சற்றே ஆறுதலாகத்தான் இருக்கிறது. 

25 செப்., 2013

வாங்க எழவுக்கு போகலாம் !

அன்னை தெரசாவின் மரணம் 

பிறப்பும், இறப்பும் நிச்சயிக்கப்பட்ட ஒன்று. இது அனைவருக்கும் தெரிந்ததே.

இரண்டுமே மனித வாழ்வில் அன்றாடம் நடக்கக்கூடிய இன்றியமையாத நிகழ்வுகள். ஒரு நிகழ்வு பிறப்பு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. மற்றொரு நிகழ்வோ சாவு, செத்து போதல், மரணம், இறப்பு, காலமாதல், இயற்கை எய்துதல் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.

பிறப்பில் தொடங்கும் வாழ்க்கை இறப்பில் முடிவடைகிறது. ஒரு புதிய உயிர் உலகுக்கு வருகிறது எனும்போது மகிழும் மனித மனம், பல்வேறு கால கட்டங்களில் நம்மோடு உறவாடி வாழ்ந்து நம்மை விட்டு, இந்த உலகத்தை விட்டு அது பிரிகிறது எனும்போது வேதனை அடைகிறது.

மரணம் என்றதுமே மிரண்டுபோகும் மனிதர்கள்தான் அதிகம். விரும்பி வரவேற்பதற்கும், அதனை ஏற்றுக்கொள்வதற்கும் எவருக்கும் துணிவில்லை. ஆனாலும் குறிக்கப்பட்ட அந்த மரண நாள் வரும்போது அதனை ஏற்றுதான் ஆக வேண்டும். எனக்கு இது நேரிடாது என்று யாரும் மறுத்து கூற முடியாது. நமது விருப்பம் இல்லாமலேயே அது நம்மை வந்தடையும்.

நல்லவர்களாக, நாலு பேருக்கு நல்லதை செய்து சமுதாயத்தில் முன்மாதிரியாக வாழ்ந்த நல்லவர்களின் மரணம் பேசப்படும். அதே நேரத்தில் அடுத்தவர்களின் வாழ்க்கையை கெடுத்து, அவர்களின் துன்பத்தில் இன்பம் காணுபவர்களாக, நல்லதை தவிர மற்ற அனைத்தையுமே செய்து வாழ்ந்து தீயவர்கள் என முத்திரை குத்தப்பட்டவர்களின் மரணமோ விமர்சிப்படும்.

பேசப்படுபவர்களின் மரணம் குறித்த செய்தியை கேள்விப்படும்போது, அவர்களின் நல்ல வாழ்க்கையும், அதனால் அவர்கள் பெற்ற ஆசீர்வாதங்களும் ஒருகணம் நமது மனதில் நிழலாடும்.
விமர்சிக்கப்படுபவர்களின் மரண செய்தியை அறியும்போது, அப்பாடா தொலைந்தான் என்று நிம்மதி பெருமூச்சு வரும். இருவருமே மனிதர்கள்தான். ஆனால் வாழ்க்கை அவர்களை வித்தியாசப்படுத்தி யிருக்கிறது.
ஆழ்ந்து உறங்கி கொண்டிருக்கும்போதே சிலரை மரணம் தழுவியிருக்கிறது. மரணம் கூட நல்ல முறையில் நிகழ வேண்டும் என்பதற்கு இது ஓர் உதாரணம்,

காலையிலிருந்து நன்றாக இருப்பார்கள், திடீரென மாலையில் லேசாக நெஞ்சு வலிக்கிறது கொஞ்ச நேரம் படுத்துக்கொள்கிறேன் என்று கூறி படுக்கைக்கு சென்றவர்கள், மீண்டும் எழாமலேயே மரணத்தோடு கை கோர்த்திருக்கிறார்கள். வாழ்க்கையின் முடிவு இது.

இயற்கை விதிகளுக்கு மாறான அகோர விபத்துகள், தற்கொலைகள், கொடூர கொலைகள் போன்றவற்றையும் நாம் சாவு என்றே குறிப்பிடுகிறோம். வாழ்க்கையின் முடிவு இவை அல்ல. விதிக்கப்பட்ட முடிவு காலம் வருவதற்குள் முடிக்கப்படுபவைகள் இவை. ஆக, வாழும் வாழ்க்கை முறைக்கேற்ப மரணமும் நம்மை வந்தடைகிறது.

நெருங்கிய உறவினர்கள், நன்கு பழகியவர்களின் மரண செய்தி கேட்டதும் கடைசியாக அவரின் முகத்தை ஒருமுறை பார்த்து விட வேண்டும் என்ற ஆவல் மேலிட விரைந்தோடுகிறோம். ஒருவேளை அவர்கள் நமக்கு ஏதாவது கெடுதல் செய்திருந்தாலும் கூட அதனை மறந்து அந்த துக்க நிகழ்வில் பங்கேற்கிறோம்.

உயிரோடு இருக்கும்போது அவருக்கு என்ன மரியாதை கொடுத்தோமோ, அதைவிட பல மடங்கு கூடுதலாக அவரின் உடலுக்கு மரியாதை செய்கிறோம். சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்து எரித்தலோ, அடக்கமோ செய்த பிறகும் அவரின் நினைவோடு சில காலம் வாழ்கிறோம்.

இதுபோன்ற நேரங்களில் மட்டுமே, இது ஒருநாள் எனக்கும் வந்து சேரும். இதிலிருந்து நான் தப்பிக்க முடியாது என்று மரணம் குறித்த சிந்தனை நமக்கு வரும்.
இந்த சிந்தனை மனிதர்களுக்கு கசப்பான மருந்தாக இருக்கும்.
கசப்பான மருந்துதான் நோயை குணமாக்கி நல்ல சுகத்தை கொடுக்கும், அதுபோலவே கசப்பாக கருதப்படும் மரணம் குறித்த சிந்தனையும் வாழ்க்கையை நல்வழிப்படுத்த உதவும்.

நம்மையே ஆராய்ந்து பார்க்கவும், நமது வாழ்க்கையை சீரமைக்கவும் இந்த சிந்தனை உதவும். அடிக்கடி மரணம் குறித்த சிந்தனை வருமானால், வாழ்க்கை ஓட்டத்தை நாம் நல்ல முறையில் ஓடி முடிக்க முடியும்.

எனவே அடிக்கடி மரண நிகழ்வுகளில் நாம் பங்கேற்போம். அதன்மூலம் மரணம் குறித்த சிந்தனையை நமக்குள் உள்வாங்கி நம்மை சீர்படுத்தி கொள்வோம். நல்ல மரணத்தை எதிர்நோக்கி நாமும் காத்திருப்போம்.

எது தீட்டு?

தீட்டு என்றால் ஒதுக்குதல் அல்லது விலக்குதல் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
தீண்டக்கூடாது என்று நாமே உருவாக்கிக் கொண்ட சிலவற்றை அல்லது சிலரை தொட்டுவிட்டால் உடனே தீட்டுப்பட்டுவிட்டது என்றும், அதற்கான பரிகாரம் செய்து தீட்டுக்கழித்து கொள்வதையும் நாம் அறிந்திருக்கிறோம்.
தீட்டு என்கிற ஒன்று மனிதனோடு, மனித மனத்தோடு நெருங்கிய தொடர்புடைய விஷயமாக ஒரு காலத்தில் இருந்தது. பெரும்பாலும் தீட்டு என்றாலே குழந்தை பிறப்புக்குப் பின் சில நாட்கள், யாராவது இறந்துவிட்டால் அதற்கு பின் வரும் சில நாட்கள், பெண் பூப்படைதல், அவளின் மாதவிலக்கு என்று வரையறுத்துக் கூறப்பட்டது.
இவற்றிற்கும் மேலாக மனிதனை மனிதன் தொடுவது கூட தீட்டாக திணிக்கப்பட்டிருந்தது.

(இந்த விஷயத்தில் மட்டும் முழுமையான மாற்றம் ஏற்படாவிட்டாலும் கொஞ்சம் மாற்றம் கண்டு சக மனிதனை மதித்து உறவாடி வருகிறோம் என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை.)

இன்றுவரை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கும் இத்தகைய தீட்டுகள் ஏதாவது பரிகாரம் மூலம் நிவர்த்திக்கப்பட்டு சுத்தமாக்கப்பட்டிருக்கிறது. ஆக தீட்டு என்றால் அசுத்தம் நீங்கி சுத்தமாகுதல் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
வழியிலே நடந்து செல்லும்போது மலத்தை மிதித்துவிட்டால், அதனோடே வீட்டுக்குள் செல்ல முடியாது. சென்றால் நாறி போய்விடும். அதனால் வீட்டுக்கு வெளியிலேயே அதனை கழுவி சுத்தம் செய்து கொண்ட உறுதி நமக்கு ஏற்பட்ட பிறகு வீட்டுக்குள் செல்கிறோம். இந்நிகழ்வை நான் தீட்டுப்பட்டுவிட்டது என்று சொல்ல வரவில்லை. அசுத்தப்பட்டுவிட்டது, அதனை சுத்தப்படுத்தி விட்டோம். இதுபோலத்தான் தீட்டு விஷயமும் என்றே சொல்ல வருகிறேன்.

மனித உடலுக்கு புறம்பான விஷயங்கள் எதுவுமே அவனை தீட்டுப்படுத்துவதில்லையாம்.

மாறாக, அவனுடைய இதயத்திலிருந்து வெளியாகும் பொல்லாத சிந்தனைகள், விபச்சார- வேசித்தனங்கள், கொலை பாதக செயல்கள், களவுகள், பொருளாசை, துஷ்டத்தனங்கள், கபடு, காமவிகாரம், பொறாமை, தூஷணம், பெருமை, மதிகேடுகள்தான் அவனைத் தீட்டுப்படுத்துகின்றனவாம்.
பொல்லாங்கான இவைகளெல்லாம் மனித உள்ளத்திலிருந்து புறப்பட்டு வந்து அவனைத் தீட்டுப்படுத்துகின்றன (மாற்கு 7: 18- 23) என்று பரிசுத்த வேதாகமத்தில் (பைபிளில்) எழுதப்பட்டிருக்கிறது.

ஒருநிமிடம் சிந்தித்து பார்த்தால் இத்தனையும் மனிதனிலிருந்து வெளிப்பட்டு அவனை எந்தெந்த வழிகளில் எல்லாம் பாவ செயல்களுக்கு உட்படுத்துகின்றன என்பதை நாம் அன்றாடம் செய்தித்தாள்களை புரட்டினாலே தெரிந்துக் கொள்ளலாம்.

தீட்டு என்று நமக்கு நாமே வரையறுத்துக் கொண்டுள்ளவற்றை எல்லாம் தவிர்த்து, நம்மை மாசுப்படுத்தும் (அசுத்தப்படுத்தும்) இவைகளை ஒதுக்கி நம்மை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே இறைவனின் எதிர்பார்ப்பு.

இதை கடைப்பிடித்துதான் பார்ப்போமே.

24 டிச., 2012

உன்னத தலைவரின் பிறந்த நாள்






தேவன் 
தம்முடைய ஒரே பேறான 
குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ 
அவன் கெட்டுப் போகாமால் 
நித்திய ஜீவனை அடையும்படிக்கு 
அவரை தந்தருளி, 
இவ்வளவாய் உலகத்தில் 
அன்பு கூர்ந்தார்.(யோவான் 3:16)

உலக வரலாற்றில் மறக்க முடியாத,
மறுக்க முடியாத உன்னத தலைவரின் பிறந்த நாள் இன்று.
அன்பு, தியாகம், எளிமை,
முன் மாதிரியான ஓர் நல்வாழ்க்கை என
அவரை போல் வாழ்ந்தவர் ஒருவரும் இல்லை
இந்த பூமியில்.

தேவனின் குமாரன் என்ற
மகிமையை தியாகம் செய்தவர்.
அழிந்து கொண்டிருக்கும்
உலக மக்களின் மேல்
அன்பு கொண்டதால்தான்
அவரின் தியாகம் உணர்த்தப்பட்டது.

அரண்மனையிலோ, மாட மாளிகையிலோ
அவர் பிறக்காமல்,
நாற்றமடுத்த மாட்டுத் தொழுவத்தில் பிறந்து,
கந்தை துணியில் சுற்றி கிடத்தப்பட்டதால்
அவரின் எளிமை அறியப்பட்டது.

சந்தர்ப்பம் கிடைத்தால் போதும்,
அடுத்தவனின் தவறை
உலகறிய செய்யும் மனிதர்கள்
மத்தியில் வாழ்ந்த காலத்தில்,
கையும், மெய்யுமாய் விபச்சாரத்தில்
பிடிபட்ட பெண்ணுக்கு,
தீர்ப்பளிக்கும் அதிகாரம் இருந்தும்
அதை செய்ய மறுத்து
அவளை மன்னித்து,
இனி நீ பாவம் செய்யாதே என்று கூறி,
மறுவாழ்வு அளித்து
முன்மாதிரியாக வாழ்ந்து காட்டியவர்.

இன்னும் எத்தனையோ
சொல்லலாம் அவரை குறித்து.

என்னை உயர்த்த
தன்னை தாழ்த்திய
அந்த உன்னதரை
உள்ளத்தில் வரவேற்போம்.
அர்த்தமுள்ள வகையில்
அவரின் பிறந்த நாளை
கொண்டாடி மகிழ்வோம்.
அனைவருக்கும்
இனிய
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

21 செப்., 2012

அழியா கலை... அழிவை நோக்கி?


சித்திரம் என்பது ஓவியத்தைக் குறிக்கும் மற்றொரு சொல்லாகும். ஓவியம் ஓர் கலை. அந்த கலையை ஆத்மார்த்தமாய் ரசிப்பது ஓர் சுகம். அந்த சுகத்தை அனுபவித்தவர்களுக்கு மட்டும்தான் அதன் மேன்மை புரியும்.
மேலும், கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம் என்றார்கள். ஆமாம், ஓவியத்தின் மீது ஆர்வம் உள்ளவர்கள் முதல்ல இதைத்தான் செய்வார்கள். பல ஓவிய மேதைகள் இப்படித்தான் தரையிலும், சுவரிலும், காகிதங்களிலும் கிறுக்கி கிறுக்கியே அந்த கலையை கற்று சாதனைப் படைத்திருக்கின்றனர்.

பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்த இந்த கலை குறித்த ஆர்வம், சிறு வயதில் நான் படிக்கும்போது எனக்கு ஏற்பட்டது. எனது ஆர்வத்தை நான் வளர்த்துக் கொள்ள முக்கிய காரணமாக இருந்தவர் என் அப்பா. வீட்டில் ஓய்ந்திருக்கும் நேரத்தில் ஒரு நோட்டு புத்தகத்தை எடுத்து, அதில் ஏதாவது ஒரு உருவத்தை வரைந்து கொண்டிருப்பார். சில நேரங்களில் வரைந்த அந்த ஓவியத்திற்கு அட்டையிலோ, தகரத்திலோ உருவம் கொடுப்பார். வயது முதிர்ந்த நிலையில் இப்போதும் கூட அதை தொடர்ந்துக் கொண்டிருக்கிறார். அதில் ஒரு ஆன்ம திருப்தி அவருக்கு.

அடுத்து ஓவியத்தின் மீது எனக்குள்ள ஆசையை வெறியாக மாற்றியவர், என்னோடு படித்த நண்பரின் அண்ணன் டாக்டர் ஜீவராஜ் அவர்கள். சென்னை, காசிமேட்டில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நல்ல மனிதர். அவர் ஹோமியோபதி மருத்துவம் படித்துக் கொண்டிருந்த நேரம் அது. அவர்களுக்கு சொந்தமான விறகு கடையில் மாலை நேரங்களில் கல்லா பெட்டியில் அமர்ந்திருப்பார். வியாபாரத்தை கவனித்துக் கொண்டே ஓவியம் வரைவார். வெள்ளைத்தாளில் கட்டங்களைப் போட்டு சிறிய அளவில் இருக்கும் ஓவியத்தை என்லார்ஜ் செய்வார். கோடுகளில் உருவத்தை வரைந்து விடுவார். பின்னர் அதற்கு ஷேடிங் கொடுப்பார். அப்படி அவர் அழகாக வரைந்த கர்மவீரர் காமராஜரின் படம் ஒன்று இன்றும் என் மனதில் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறது.

அதன்பிறகு பத்திரிகைகள், சுவர் விளம்பரங்கள் என அந்த காலக்கட்டத்தில் வரைந்து கொண்டிருந்த பலரது ஓவியங்கள் என்னைக் கவர்ந்தன. விடுமுறை நாட்களில் பேப்பரும், பென்சிலும்தான் எனக்கு துணை. எதையாவது வரைந்து கொண்டிருப்பேன். படம் வரையும் ஆர்வம் அதிகரித்ததால் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இருந்த ஒரு ஓவியப் பயிற்சி பள்ளியில் சேர்ந்து அஞ்சல் வழியில் ஓவியம் கற்றேன். டிப்ளமோவும் வாங்கினேன். இன்றும் அந்த பயிற்சி பள்ளி இயங்கி கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். 
இப்பவும் படம் வரைகிறாயா என்று மட்டும் கேட்காதீர்கள்.

அந்த வகையில் என்னைக் கவர்ந்த ஓவியர்கள் சிலர் இன்றும் நினைவில் இருக்கின்றனர். வடசென்னைப் பகுதியில் ராமன் ஆர்ட்ஸ், மகபூப் ஆர்ட்ஸ், ஜே.பி.கிருஷ்ணா ஆர்ட்ஸ் என பல ஓவிய நிறுவனங்கள் செயல்பட்டன. இந்நிறுவனத்தினர் சுவர்களில் படம் வரைவதில் கொடிகட்டி பறந்தனர். இவர்களின் சுவர் விளம்பரங்கள் நான் செல்லும் வழியில் எங்கேயாவது வரையப்பட்டால் மெய் மறந்து நின்று விடுவேன். பெரிய சுவர்களில் ஒருநாளில் முழு உருவமும் வரைய முடியாது. அதனால்  அந்த ஓவியம் முழுமை பெறும் நாள் வரை தொடர்ந்து அந்த பகுதிக்குச் சென்று பார்த்து வருவேன். முழுமையானதும் அதன் அழகை ரசித்து பார்ப்பேன். இவர்களின் கைவண்ணத்தில் அன்றைய சினிமா நட்சத்திரங்கள் அழகாகவே தெரிவார்கள். இவர்களை அடியொற்றி சிறு சிறு ஓவியர்களும் இந்த தொழிலில் ஈடுபட்டனர்.

அப்போதெல்லாம் சினிமா தியேட்டர்களின் வாசல்களில், திரையிடப்படும் படத்தின் காட்சிகளைக் கொண்ட மிகப்பெரிய பேனர்கள்தான் ஆதிக்கம் செலுத்தின. பேனரில் உள்ள அந்த படங்களை பார்த்துவிட்டு உள்ளே சென்று சினிமாவைப் பார்த்தால் வித்தியாசமே தெரியாது. அந்த அளவிற்கு கைகளால் வரையப்படும் ஓவியங்களுக்கு மவுசு இருந்தது.

ஓவியர்கள் மாருதி, ஜெயராஜ், மணியம் செல்வன், ஜமால், ட்ராஸ்கி மருது இவர்களின் படங்களுக்காகவே பல பத்திரிகைகளை வாங்குவேன். குறிப்பாக ஓவியர் மாருதியின் படம் என்றால் உயிர். அந்த படத்தை அப்படியே வரைய வேண்டும் என்று முயற்சி செய்வேன். கான மயிலாட கண்டிருந்த வான்கோழி கதையாகிவிடும். இருப்பினும் முயன்று கொண்டிருப்பேன்.



பெண்களின் உருவம், அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகள், ஆபரணங்கள் என ஒன்றையும் மிச்சம் வைக்காமல் அச்சுபிசகாமல் தத்துரூபமாய் வரையும் மாருதியின் ஓவியங்களும்,
மாடர்ன் டிரஸ் அணிந்த பெண்களின் உருவத்தை வரைந்து அவர்கள் அணிந்திருக்கும் டீ-சர்ட்டில் கவர்ச்சி வாசகங்கள் எழுதி அதன்பின் மறைந்திருக்கும் மார்பழகை வெளிப்படுத்தும் ஜெயராஜின் அந்த கோட்டு ஓவியங்களும் அப்பப்பா...



வரலாற்று பின்னணி கொண்ட அரசர்கள், அரசிகள், போர்க்களக் காட்சிகளை கோட்டோவியமாக வரைந்து அந்த வரலாற்றுக் காலக் கட்டத்திற்கே நம்மை அழைத்துச் செல்லும் மணியம் செல்வத்தின் ஓவியமும் அடடா... இப்போது நினைத்திலும் வியப்பாக இருக்கிறது.



இப்போது எங்கு பார்த்தாலும் கைகளால் வரையப்படும் ஓவியங்களைவிட கணினி மூலம் வரையப்படும் ஓவியங்கள்தான் நம் கண்களில் தென்படுகின்றன. கணினிமூலம் வடிவமைக்கப்படும் ஓவியங்களில் அன்றிருந்த அந்த தத்துரூபமும், உயிரும் இன்று காணாமல் போய்விட்டது. அதைபோலவே கைகளால் வரைந்து பிழைப்பு நடத்தி வந்த பலர் இன்று அந்த தொழிலை விட்டு வேறு தொழிலை செய்து வருகின்றனர். விரல் விட்டு எண்ணும் அளவிற்கு அங்கொன்றும், இங்கொன்றுமாக சில ஓவியர்கள் இன்றும் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பலர் காலத்திற்கேற்றபடி கணினி மூலம் படங்களை வரைந்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

காலத்தின் கட்டாயத்தில் சிறிது சிறிதாக மறைந்து கொண்டிருக்கிறது ஓவியக்கலை. பேப்பரும், பென்சிலும் கொண்டு கைகளால் வரைவது மறைந்துபோய் எலி வாலைப் பிடித்து இன்று கணினியில் படம் வரையப்படுகிறது. இன்றைய தலைமுறையினருக்கு கற்று தரப்படும் பயனில்லா விஷயங்களில் ஓவியக்கலையும் சேர்ந்துவிடுமோ என்றே நினைக்கத் தோன்றுகிறது.
மனதில் அமைதியும், சந்தோஷமும் தாண்டவமாடும் இனிய சூழலில் ஓவியம் வரைதல் ஓர் சுகம்.
இன்றைய காலக்கட்டத்தில் எங்கேங்க இப்படி ஒரு இனிய சூழலை அனுபவிக்க முடியுது? ஓவியம் வரையற மூடே வரமாட்டேங்குது... எப்படியாவது ஒரு ஓவியத்தை வரையணும், முயற்சி பண்றேன்.